பிசினஸ் ட்ரிக்ஸ்


மீன் பிடிப்பவன் ஒருவன் கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியுடன்ஒரு குளக் கரையில் நின்று கொண்டிருப்பதை ஒருவன் பார்த்தான்.


அவன் கண்ணாடியை வைத்து என்ன செய்கிறான் என்று வினவினான். அதற்கு மீன் பிடிப்பவன், தான் கண்ணாடி கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான். மேலும் இது ஒரு புதிய வழி முறை என்றும் இது கொண்டு தான் பெரும் செல்வம் சேர்க்கப் போவதாகவும் கூறினான்.


'அது எப்படி செயல் படுகிறது..??' என்று கேட்டான்.


''சொல்கிறேன். ஆனால் அதற்கு நீ ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்...!'' என்றான். வந்தவனும் ஆர்வ மிகுதியால் ஆயிரம் ரூபாயை அவனிடம் கொடுத்தான்.


இப்போது மீனவன் சொன்னான்,''நான் கையிலிருக்கும் கண்ணாடியை மீன்கள் நீரில் ஓடும் பக்கம் திருப்பி வைத்து சூரிய ஒளியின் பிரதிபலிப்பான வெளிச்சம் ஓடும் மீன்களின் மீது படுமாறு செய்வேன். உடனே ஓடும் மீன்கள் குழப்பத்தில் நிற்கும். அப்போது நான் அவற்றை இலகுவாகப் பிடித்து விடுவேன்.


வந்தவன் அதிர்ச்சி அடைந்தான். அவன் கேட்டான், 'இது பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது. இப்படி தான் நீ மீன் பிடிப்பாயா..? அது சரி, இன்று இந்த முறையில் எத்தனை மீன்கள் பிடித்திருக்கிறாய்..?


மீனவன் சொன்னான்....


''இன்று நீ ஆறாவது...!!''


இப்படித்தான் நம்மில் பலர் “பணம் சம்பாதிப்பது எப்படி..??” கோடீஸ்வரர் ஆவது எப்படி..??” சிறப்பாக தொழில் செய்வது எப்படி..??” என்று எழுதப்பட்ட புத்தகங்களை வாங்குகின்றனர்.