பேய்கள் ஜாக்கிரதை
ஒரு சிறுவன் புத்தகம் எதாவது வாங்கலாம்னு கடைக்குப் போனான். அது ஒரு பழைய்ய புத்தகக் கடை. ரொம்ப வயசான தாத்தா அந்த கடைல இருந்தாரு. பார்க்க ரொம்ப பயங்கரமா இருந்தாரு... தலை நிறையா வெள்ளை முடி. சூனியக்கார கிழவி மாதிரி இருந்தாரு..
சிறுவனுக்கு ஒரே பயம். இருந்தாலும் தைரியமா கடையில் உள்ள புத்தகங்களை பார்க்க ஆரம்பிச்சான். கடை முழுவதும் ஓரளவே வெளிச்சம். பாதிக்கு மேல் கடைக்குள் போகவே முடியல. அவ்வளோ இருட்டு. புத்தகங்கள் எல்லாம் ஒரே தூசி.
இறுதியா ஒரு புத்தகத்தை எடுத்தான். “பேய்களின் எச்சரிக்கை” அதோட பேரு.
சிறுவன் புத்தகத்தைத் தாத்தாட்ட கொடுத்து, இதை நான் வாங்கிக்கிறேன்னு சொன்னான்.
தாத்தா அவனை கோபமா பார்த்தார். “இந்த புத்தகம் பயங்கரமானது. இதோட விலை ரூ. 500 தான். ஆனா இந்த புத்தகத்தை வாங்கி படிச்சவங்கள பேய்கள் சும்மா விடாது. இதைப் படிச்ச இரண்டு பேர் இருதயம் வெடிச்சு செத்துட்டாங்க. நீ இந்த புத்தகத்தைப் படி. ஆனா ஒரு நிபந்தனை. கடைசிப் பக்கத்தை மட்டும் படிக்காத”. சிறுவன் புத்தகத்துடன் வீடு திரும்பினான்.
நிசப்தமான இரவு. 11 மணி. சிறுவன் புத்தகம் முழுவதும் படித்து விட்டான். கடைசி பக்கம் மட்டும் படிக்கவில்லை. மேஜையில் அந்த புத்தகம் காற்றில் ஒவ்வொரு பக்கமாக புரண்டது. கடைசி பக்கம் படிக்கலாமா வேண்டாமா என்ற பயம் கலந்த ஆசை அவனுக்கு. விதி அவனையும் விடவில்லை.
காற்று புத்தகத்தை புரட்டி கடைசி பக்கத்தை நெருங்கியது. சிறுவனுக்கு பயத்தால் வியர்த்தது.
ஆம்.. கடைசி பக்கத்தை படித்த சிறுவனும் இருதயம் வெடித்து இறந்தான்.
அதில் இருந்த ஒரு வரி.......
விலை ரூ.15
0 கருத்துகள்